Thursday, August 20, 2009

கருக்குலைந்த நிலையில் இயற்கை வளங்கள்

சமீபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நம் தோழியருள் ஒருவர் காவிரிஆற்றைப்பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததிலிருந்தே இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்ற ஆவல் உந்திக்கொண்டே இருந்தது. என் மனக்குமுறல்களை அவருடைய பதிவில்கூட பின்னுரையாய் எழுதியிருப்பேன்.
காவிரி ஆற்றின் வளமையும் அதைச் சார்ந்த டெல்டா மாவட்டங்களின் செழுமையும் நாம் அறிந்ததே.. ஆனால் அவற்றின் இப்போதைய நிலை??? மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். எங்கள் ஊரிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த சோலை போல் மரங்கள் நெடிது வளர்ந்திருக்கும். ஒரு பக்கம் காவிரியாறும் மறுப்பக்கம் வாய்க்கால்க்களுமாய் பச்சைப்பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்.


ஆனால் இப்போது அத்தனை மரங்களும் நெடுஞ்சாலைத்துறையினரால் வேரோடு அழிக்கப்பட்டு சாலைப் புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் அந்த சாலையில் போகும்போது சொல்லொண்ணாத் துயரம் நெஞ்சை அடைக்கிறது. நெடுஞ்சாலைத்துறையில் இந்த மரங்களை அழித்ததுக்கு பரிகாரமாக சாலைக்கு நடுவே காகிதப்பூச்செடி நட்டு செல்வார்கள். கவனிக்கவும். செடி நடுவது மட்டுமே அவர்கள் செய்வது. பராமரிப்பைப் பற்றி நாம் கேட்கக்கூடாது. இங்கே டார்வினின் சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட் கோட்பாடுதான் ஜெயிக்கும்.
சாலையோர மரங்களின் கதி இதுவென்றால் காவிரியின் நிலைமை கேட்கவே வேண்டாம். ஆற்றுக்கு நடுவில் ரோடு போட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கில் லாரிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. காவிரித்தாயின் கருவை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி காவிரியின் இரு கரைகளையும் இணைக்கும் வண்ணம் ஆங்காங்கே பாலங்கள் வேறு. ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடினாலும் புழங்குவதற்கு ஆபத்துகள் அதிகம். மணல் அள்ளவும், பாலம் கட்டவும் ஏற்படுத்தப்பட்ட குழிகள் ஜல சமாதிகளாக மாறும் வாய்ப்பு அதிகம். சாயப்பட்டறைக் கழிவுகள் அத்தனையும் காவிரியோடு கலந்து கறையாக்கிகொண்டிருக்கின்றன. இவை எல்லாமுமாய் சேர்ந்து காவிரி கருக்குலைந்து போய்க்கிடக்கிறாள்.
மேலும் எல்லா இடங்களிலும் பெரிய பெரிய அபார்டுமேன்ட்களைக் கட்டுவதால் நிலத்தடி நீர் காணாத தூரம் போய்விட்டது. எங்கும் ஓரடி மண்ணைப் பார்க்க முடியவில்லை. இப்படி இருந்தால் எப்படி நிலத்துக்குள் தண்ணீர் இறங்கும். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்??? அதிகரிக்க வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்து இன்னும் கீழே போகாமல் இருந்தால் போதுமே. விளை நிலங்கள் அத்தனையும் விலைபோய்விட்டன. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் கொள்கைகளெல்லாம் காற்றில் பறந்து விட்டது. காற்றுகூட இன்று விஷமாகிக்கொண்டு வருகிறது. பிற விஷயங்களில் சரித்திரம் திரும்பும் எனக் காத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் திரும்பப்பெறமுடியாத வளங்களின் கதி???
நான் இங்கே கூறியிருப்பது ஒரு சில விஷயங்களை மட்டும்தான். என்னைச் சுற்றி எனக்கருகே நடக்கும் சிலவற்றைப் பற்றி மட்டும். (ஏதோ எனக்கு தோன்றியவற்றைப் பதிவு செய்துள்ளேன்). இப்படி அவரவர் தனக்கருகே நடப்பவற்றை கவனித்தால் கூட போதுமே.
நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பார்த்து எத்தனையோ நாடுகள் பொறாமைப்படுகின்றன. ஆனால் நாம் அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தன் வரையில் என்ன செய்யமுடியுமோ, எதை செய்யாமல் தடுக்க முடியுமோ அவற்றை மட்டும் செயல்படுத்தினால் கூட நாட்டு வளம் காக்கப்படும்.
நாட்டின் முன்னேற்றம் அத்தியாவசியமானது. ஆனால் அந்த முன்னேற்றம் நாட்டின் முக்கிய கருவான இயற்கை வளங்களைக் கருக்கிய சாம்பல்களின் மேல் அல்ல. கவனிக்குமா சம்பந்தப்பட்ட துறை?? கவனிப்பார்களா மக்கள்???
வாருங்கள் பேசுவோம்...

3 comments:

  1. இதை பற்றி எழுதவும் செய்ய வேண்டும் மேலும் நேரம் கிடைக்கும் பொது நம்மால் ஆனா சிறு காரியங்களும் செய்ய வேண்டும்.

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  2. அழைப்பிதல்

    நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
    நாள் : உங்கள் நாள்
    நேரம்: உங்களின் நேரம்

    வரவேற்பு : கவிதைகள்

    அன்புடன்,
    சந்தான சங்கர்.

    (மொய் எழுதவேண்டாம்
    மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)

    ReplyDelete
  3. Nothing will be changed unless we get changed ourselves. We as a fellow citizen have the full right to prevent many anti-social events. It is our place, our land, our home. We have to throw those rascals out. At least that native people have to stop those lorry's inside their land from sand theft.
    மக்கள் விழிக்க வேண்டும்.

    ReplyDelete