Thursday, August 20, 2009

கருக்குலைந்த நிலையில் இயற்கை வளங்கள்

சமீபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நம் தோழியருள் ஒருவர் காவிரிஆற்றைப்பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததிலிருந்தே இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்ற ஆவல் உந்திக்கொண்டே இருந்தது. என் மனக்குமுறல்களை அவருடைய பதிவில்கூட பின்னுரையாய் எழுதியிருப்பேன்.
காவிரி ஆற்றின் வளமையும் அதைச் சார்ந்த டெல்டா மாவட்டங்களின் செழுமையும் நாம் அறிந்ததே.. ஆனால் அவற்றின் இப்போதைய நிலை??? மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். எங்கள் ஊரிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த சோலை போல் மரங்கள் நெடிது வளர்ந்திருக்கும். ஒரு பக்கம் காவிரியாறும் மறுப்பக்கம் வாய்க்கால்க்களுமாய் பச்சைப்பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்.


ஆனால் இப்போது அத்தனை மரங்களும் நெடுஞ்சாலைத்துறையினரால் வேரோடு அழிக்கப்பட்டு சாலைப் புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் அந்த சாலையில் போகும்போது சொல்லொண்ணாத் துயரம் நெஞ்சை அடைக்கிறது. நெடுஞ்சாலைத்துறையில் இந்த மரங்களை அழித்ததுக்கு பரிகாரமாக சாலைக்கு நடுவே காகிதப்பூச்செடி நட்டு செல்வார்கள். கவனிக்கவும். செடி நடுவது மட்டுமே அவர்கள் செய்வது. பராமரிப்பைப் பற்றி நாம் கேட்கக்கூடாது. இங்கே டார்வினின் சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட் கோட்பாடுதான் ஜெயிக்கும்.
சாலையோர மரங்களின் கதி இதுவென்றால் காவிரியின் நிலைமை கேட்கவே வேண்டாம். ஆற்றுக்கு நடுவில் ரோடு போட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கில் லாரிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. காவிரித்தாயின் கருவை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி காவிரியின் இரு கரைகளையும் இணைக்கும் வண்ணம் ஆங்காங்கே பாலங்கள் வேறு. ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடினாலும் புழங்குவதற்கு ஆபத்துகள் அதிகம். மணல் அள்ளவும், பாலம் கட்டவும் ஏற்படுத்தப்பட்ட குழிகள் ஜல சமாதிகளாக மாறும் வாய்ப்பு அதிகம். சாயப்பட்டறைக் கழிவுகள் அத்தனையும் காவிரியோடு கலந்து கறையாக்கிகொண்டிருக்கின்றன. இவை எல்லாமுமாய் சேர்ந்து காவிரி கருக்குலைந்து போய்க்கிடக்கிறாள்.
மேலும் எல்லா இடங்களிலும் பெரிய பெரிய அபார்டுமேன்ட்களைக் கட்டுவதால் நிலத்தடி நீர் காணாத தூரம் போய்விட்டது. எங்கும் ஓரடி மண்ணைப் பார்க்க முடியவில்லை. இப்படி இருந்தால் எப்படி நிலத்துக்குள் தண்ணீர் இறங்கும். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்??? அதிகரிக்க வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்து இன்னும் கீழே போகாமல் இருந்தால் போதுமே. விளை நிலங்கள் அத்தனையும் விலைபோய்விட்டன. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் கொள்கைகளெல்லாம் காற்றில் பறந்து விட்டது. காற்றுகூட இன்று விஷமாகிக்கொண்டு வருகிறது. பிற விஷயங்களில் சரித்திரம் திரும்பும் எனக் காத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் திரும்பப்பெறமுடியாத வளங்களின் கதி???
நான் இங்கே கூறியிருப்பது ஒரு சில விஷயங்களை மட்டும்தான். என்னைச் சுற்றி எனக்கருகே நடக்கும் சிலவற்றைப் பற்றி மட்டும். (ஏதோ எனக்கு தோன்றியவற்றைப் பதிவு செய்துள்ளேன்). இப்படி அவரவர் தனக்கருகே நடப்பவற்றை கவனித்தால் கூட போதுமே.
நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பார்த்து எத்தனையோ நாடுகள் பொறாமைப்படுகின்றன. ஆனால் நாம் அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தன் வரையில் என்ன செய்யமுடியுமோ, எதை செய்யாமல் தடுக்க முடியுமோ அவற்றை மட்டும் செயல்படுத்தினால் கூட நாட்டு வளம் காக்கப்படும்.
நாட்டின் முன்னேற்றம் அத்தியாவசியமானது. ஆனால் அந்த முன்னேற்றம் நாட்டின் முக்கிய கருவான இயற்கை வளங்களைக் கருக்கிய சாம்பல்களின் மேல் அல்ல. கவனிக்குமா சம்பந்தப்பட்ட துறை?? கவனிப்பார்களா மக்கள்???
வாருங்கள் பேசுவோம்...

Tuesday, August 18, 2009

பாஸ்போர்ட் இருநூறு ரூபாய்.. சான்றிதழ் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்

என் முதல் பதிவே இன்று நாட்டில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் பற்றியதாய் அமைந்துவிட்டது.


என் பக்கத்து வீட்டு பெண் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தார்.. சில தினங்களுக்கு முன் வெரிபிகேசனுகாக எங்கள் ஊர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கான்ஸ்டபில் வந்தார்.. அது சமயம் என் பக்கத்து வீட்டில் அந்த தோழியைத் தவிர வேறு யாரும் இல்லை... அந்த போலீச்காரரோ வந்ததிலிருந்தே மிகவும் அதிகாரத் தோரணையிலேயே பேசியிருக்கிறார்... அது கூட பரவாயில்லை.. வெரிபிகேசனுகாக இப்போது என்னிடம் இருநூறு ருபாய் குடுக்கவேண்டும் அப்புறம் ஸ்டேசனுக்கு போய் ஏட்டு ஐயாவை பார்த்து கையெழுத்து போட்டு விட்டு அவரிடம் முந்நூறு ருபாய் குடுத்துடு என்று அதிகாரமாய் கேட்டிருக்கிறார்.. இந்த பெண்ணோ என்னிடம் இப்போது பணம் இல்லை, வீட்டிலும் யாரும் இல்லை, அதனால் ஸ்டேசனுக்கு வரும்போதும் தருகிறேன் என்று கூறியுள்ளார்.. அதற்கு அவரோ "பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கி குடு.. நீ ஸ்டேசனுக்கு வரும்போது நீ வருவ வருவன்னு நான் பார்த்துகிட்டா உட்கார்ந்திருக்க முடியும்... இப்போ நீ குடுக்கலைனா இந்த அட்ரசில நீ இல்லைன்னு சொல்லித் திருப்பி அனுப்பிடுவோம்.. அப்புறம் பாஸ்போர்ட் ஆபீசுக்கு நீ திரும்பவும் அலையனும்.. இருநூறு ரூபாய்க்காக பாக்காத... வேலை முடியனுமில்ல" என்று மிரட்டி இருக்கிறார்... இவரும் வேறு வழியின்றி என்னிடம் பணம் வாங்கி கொடுத்தனுப்பி விட்டார். அப்போது நானும் வீட்டில் தனியாகத்தான் இருந்தேன். பெரியவர்கள் யாரேனும் இருந்திருந்தால் கூட அவரை கேள்வி கேட்டிருப்பார்கள். எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. இன்னும் முந்நூறு ரூபாய் அழவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஸ்டேசனுக்கு சென்றார் அந்த தோழி. ஆனால் பிறகுத்தான் தெரிந்தது இந்த கான்ஸ்டபில் கொள்ளைக்கும் ஏட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று. அந்த ஸ்டேசனில் ஏட்டு TVS-50 ல் வருவார். நம்ம கான்ஸ்டபில் splendor ல் ஊருக்குள் வலம் வருவார்.
லஞ்சம் குடுக்கக்கூடாது என்ற எண்ணம் மனதிலிருந்தாலும் இந்த மாதிரி மிரட்டல்களுக்காகவும் நம் வேலை நடக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த அதிகாரப்பிச்சைக்கு அடங்கித்தானே போகவேண்டி இருக்கிறது. இதைப் பற்றி புகார் செய்யலாம் எனத் தோன்றினாலும் நம் வேலை கெட்டுவிடுமே என பயப்படத்தான் வேண்டி இருக்கிறது. எத்தனையோ பேர் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்கிறார்கள். வெறும் வெரிபிகேசனுகாக ஒவ்வொருவரிடம் இருந்தும் இருநூறு ரூபாய் என்றால் அவர் இதுவரையில் எவ்வளவு சம்பாதித்திருப்பார். இது மட்டுமல்ல...


ஒரு நாள் ஒரு டிராபிக் போலிஸ் ஒரு சாலையில் டியூட்டியில் நின்றுகொண்டிருந்தார் . லைசென்ஸ் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய சீருடையோ மிகக்கேவலம். காக்கி கால்சட்டைக்கு பதிலாக கொஞ்சம் வேறு கலரில் கால்சட்டையும், காலில் பூட்சுக்கு பதிலாக செருப்பும் அணிந்திருந்தார். மூத்த அதிகாரிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு தானே இது? மக்களின் மத்தியில் காவல் துறையினரைப் பற்றிய தவறான எண்ணங்கள் மாறவேண்டும் எனின் இந்த அடிப்படை விஷயங்களிலும் அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். கவனிக்குமா காவல் துறை??? காவல் துறையில் மட்டுமல்ல.. எல்லா துறைகளிலுமே இதுதான் நடக்கிறது. ஒரு OBC சான்றிதழ் தருவதற்காக ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். லைசன்ஸ் வாங்க போனால் என்ன நிலை என்று எல்லோரும் அறிந்ததே.. பேசி மட்டும் என்ன மாறப்போகிறது என்கிறீர்களா??? ஏதோ இப்படி பேசியாவது என் ஆதங்கத்தை உங்களிடம் சொல்லலாம் என்றுதான். வாருங்கள் பேசுவோம் இதைப்பற்றி..

பேசுவோம்


சில செய்திகளையோ இல்லை நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையோ பகிர்ந்துகொள்ளவே இந்த பக்கம்.. சில விஷயங்களில் மற்றவர்களுடைய கருத்துக்கள் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆசை... வாருங்கள்பேசுவோம்...