Tuesday, January 7, 2014

பொங்கலோ பொங்கல்

இப்படி அப்படின்னு இதோ பத்து நாள்ல பொங்கல். எங்கேயோ வெளிநாட்டுல உட்கார்ந்துகிட்டு இருந்தாலும், பொங்கல் நெருங்க நெருங்க தனியா ஒரு பாரம் மனசுக்குள்ள அழுத்த ஆரம்பிச்சுடும். ஹாஸ்டல்ல தங்கிப்படிச்சப்ப கூட, லீவுல ஊருக்கு போகமுடியும். இங்க இருந்துகிட்டு பொங்கலப் பத்தி நினைச்சுதான் பார்க்க முடியும். எங்க வீட்டு பொங்கல்... 
புது வருஷம் பொறக்குதோ இல்லியோ.. எங்க அம்மாச்சி வீடு சுத்தம் பண்ண ஆள் அனுப்பிடும். தைப்பொங்கல் வருதுங்கிற சந்தோசம் இருந்தாலும் வீட்டுல கூடமாட வேலை செய்யணுமேன்னு அலுப்பா இருக்கும்.. போகிக்கு காப்பு கட்டுறதுல ஆரம்பிச்சு மூணாம் நாள் கறி சோறு  சாபிடுற வரைக்கும் பாட புத்தகத்துக்கெல்லாம் டாட்டா பை பை தான்.
போகிக்கு காப்பு கட்டுன பிறகு அம்மா வாசல் வழிக்க ஆரம்பிச்சுடும். அரிசி மாவுக்கோலம் போட்டு செம்மண் கரைகட்டி.. வீடே அம்சமா இருக்கும்.விடியக்காலைல நீ கோலம் போடுற வரை காத்திருந்தா பொங்கல் முடிஞ்சு கரிநாள் வந்துடும்னு சொல்லி, முந்தின ராத்திரி பதினோரு பன்னெண்டு மணிக்கு ஆரம்பிக்கும் கோலம் போடுற படலம். கோலம் போட்டு கலர் போடி தூவி பொங்கல் நல்வாழ்த்துக்கள் -னு  எழுதுற நேரத்துல ஒரு கும்பல் வரும். பக்கத்து தெருவுல கோலம் போட்டு முடிச்ச கும்பல் தான் ரவுண்ட்ஸ் வருவாங்க, ஒவ்வொரு கோலத்துக்கா மார்க் போட்டுக்கிட்டு. 
கிராமத்துல பொங்கல் கொண்டாடுற வரை.. மண்வாசம் மணக்க மணக்க பொங்கல் கொண்டாடுவோம். டவுன்ல பொங்கல் கொண்டாட ஆரம்பிச்சதுக்கப்புறமும் ஏனோ குக்கர் பொங்கலுக்கு எப்போதுமே தடா தான். ரோட்டுல கல்ல வச்சு எங்க அம்மாவுக்கு வந்த பொங்கச்சீர் பானைல பொங்கல் வைக்குற சுகமே தனிதான். வெண் பொங்கல் சோறும் சீரக மிளகு ரசமும் தலை வாழை இலைல வழியவிட்டு சாப்பிடுறது இருக்கே அட அட... 
ஊர்ல இருக்கும்போது தைப்போங்கல்னு பேருக்கு ஒன்னு வெச்சிட்டு, மறுநாள் மாட்டுப்பொங்கலன்னிக்கு தான் திருவிழா மாதிரி நடக்கும். மாடு கண்ணு எல்லாம் குளிப்பாட்டி, கொம்புக்கு பெயிண்ட் அடிச்சு, அலங்காரம் பண்ணி, மாட்டுக்கொட்டாய்ல பொங்கல் வைப்போம். 

இப்போ எல்லாம், முதல் நாள்  பொங்கல் நல்லா வெச்சிட்டு, மறுநாள் மாடு கண்ணு இல்லாட்டி என்ன, வீட்டுல ஒரு வானரப் படை இருக்கே, அதுக்காவது வைப்போம்னு, எங்க அம்மாச்சி பொங்கல் வைக்கும். அம்மாச்சி வீட்டுத் தெருவுல இருக்குற ஆடு மாடு வெச்சிருக்க யாரோ ஒருத்தர் பொங்கல் வைக்க கூப்பிடுவாங்க. அடுத்த வீட்டுப் பொங்கல் சுவையே அலாதிதான். அன்னிக்கு ராத்திரி ஊர் மந்தைல திரை கட்டி படம் போடுவாங்க. 
வெளில என்ன நடந்தாலும் வீட்டுக்குள்ள டி.வி முன்னாடி கட்டிப்போட்ட மாதிரி உட்கார்ந்திருக்க இந்த காலத்துலயும், கரி நாள் அன்னிக்கு ஒருத்தரையும் வீட்டுக்குள்ள பார்க்க முடியாது. ஊர் மந்தைல தான் சிறுசு பெருசுன்னு அத்தன பேரும் கூடி இருப்பாங்க. ஊருக்குள்ள இருக்க இளவட்ட கூட்டம் ஒன்னு விளையாட்டு போட்டியெல்லாம் நடத்தும். காலைல எட்டு மணில இருந்து ராத்திரி பதினோரு மணி வரைக்கும் ஓயாம மைக் செட்டு அலறும். மதியம் கறிச்சோறு தின்னுட்டு தூங்குனது போதும் மந்தைக்கு வாங்கப்பா-னு எல்லாம் மைக்ல அழைப்பு வரும். விளையாட்டு போட்டி எல்லாம் பார்க்க ஒரு கூட்டம், கலந்துக்க ஒரு கூட்டம், வர பொண்ணுங்கள சைட் அடிக்க ஒரு கூட்டம்னு, மந்தைல இருக்க புள்ளையார் கோயில் வாசல்ல பெரிய கூட்டமே கூடிடும். கோலப் போட்டி, ஓட்டப்பந்தயம், ஸ்லோ சைக்கிள் ரேஸ், பானை உடைத்தல்னு விளையாட்டெல்லாம் சாயங்காலம் அஞ்சு மணிவரை நடக்கும். பானைய உடைச்சு பரிசாக் குடுக்குற அண்டாவ வீட்டுக்கு கொண்டாராட்டி சோறு இல்லடி உனக்குன்னு பையன பார்த்து பாட்டி ஒருத்தங்க கத்திட்டு போவாங்க. அது என்ன மாயமோ மந்திரமோ, வருஷா வருஷம் அந்த அண்ணன் தான் பானைய உடைப்பாரு. வீட்ல சோறாக்கிட்டு இருக்குறவங்க கூட எல்லாத்தையும் விட்டுட்டு பானை உடைக்குறத பார்க்க வருவாங்க. அப்புறமென்ன, ஆட்டம் பாட்டு, நாடகம்னு கலை களைகட்டும். அந்த வருஷம் வந்த பிரபலமான குத்துப் பாட்டை இனி கேட்கும் போதெல்லாம் காதைப்பொத்தும் அளவுக்கு பாட்டுப் போட்டி டான்ஸ் போட்டி எல்லாத்துலயும் குட்டிப்  பசங்க தேச்சு எடுத்துடுவாங்க. இடையிடைல அறிவுக்கும் வேலை குடுப்பாங்க. பொது அறிவுக்கேள்வி கேட்டு பதில் சொல்றவங்களுக்கு சொம்பு டம்ளர்னு குடுப்பாங்க. 
இது எல்லாம் நடக்கும் போது எங்க அம்மாவுக்கும் எனக்கும் நடுவுல ஒரு நயன பாஷை ஓடும். பொட்டப்புள்ளையா அடக்கமா ஒரு இடத்துல இரு.. அங்கயும் இங்கயும் ஓடாதனு ஒரே கண் உருட்டல்ல மொத்த விஷயத்தையும் புரிய வெச்சுடுவாங்க. இன்னைக்கு வரைக்கும் இதுல எதுவுமே மாறல, எனக்கு தெரிஞ்சு இருபத்தி அஞ்சு வருஷமா. அப்போ போட்டி நடத்துன இளவட்டங்கள் இப்போ பரிசு குடுக்குற சிறப்பு விருந்தினர்களா மாறி இருக்காங்க. எங்க தாத்தா  மாமா  உட்பட. இன்னைக்கு வரைக்கும் எங்க அம்மாச்சி காசை இடுப்புல முடிஞ்சுகிட்டு எதோ ஒரு பேரனுக்கு குச்சி ஐஸ் வாங்கிக்குடுத்துகிட்டு தான் இருக்கு. அம்மா பொண்ணுக்கு நடுவுல நடக்குற அந்த நாடகம் கூட இன்னமும் நடக்குது. பாத்திரங்கள் மட்டும் என் மாமன் மகளும் அத்தையுமா. கரிநாள் அன்னைக்கு போன் பண்ணினா எங்க அத்தை கழுதைங்க ரெண்டும் மந்தைலதான் இருக்குனு சொல்றத கேட்கலாம். 
எதுவுமே மாறல ..நாலு வருஷமா மூத்த வானரம் வீட்ல இல்லாம பொங்கல் வைக்கும் போது அம்மாவும் அம்மாச்சியும் கொஞ்சமே கொஞ்சமாய் வருந்துவதாக மட்டும் கேள்வி :)