Tuesday, March 30, 2010

பெண்களுக்கு எதிராய்...........

சமூக அவலங்களுள் மிகவும் முக்கியமானவை பெண்களுக்கு எதிரான கொடுமைகளே.. வன்முறை மட்டும் இன்றி என்னைப் போல் பல இளம் பெண்கள்... எப்படியும் 80 சதவிகிதம் பெண்கள்.. நான் அனுபவித்ததை அவர்களும் அனுபவித்திருப்பார்கள்...
இன்று எங்கள் ஊரில் இருந்து திருச்சிக்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். மூன்று பேர் அமரும் இருக்கையில் நடைபாதை ஓரமாக நான் அமர்ந்திருந்தேன். பேருந்தில் கொஞ்சமாக கூட்டம் இருந்ததால் எப்படியும் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் அருகில் வந்து நின்றார். முன்தலை கொஞ்சம் சொட்டை விழுந்து, முடி நரைத்து போய் இருந்தார். பேண்டும் சர்ட்டும் போட்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது அவரின் உள்நோக்கம். மெதுவாய் சீண்டுவதற்கு ஆரம்பித்தார். பிறகு கேட்கவா வேண்டும். அசிங்கமாய் திட்ட தோன்றினாலும், அடக்கமாய் " என்ன சார் பண்றீங்க, அசிங்கமா இல்ல உங்களுக்கே??? இதுக்குத்தான் வரிங்களா?? அந்த பக்கம் நகர்ந்துபோய் நில்லுங்க" என்று மட்டும் குரலை உயர்த்திக் கூறினேன். அதற்க்கு அந்த ஆள் அமைதியாக சாரி என்று சாதாரணமாக சொல்லிவிட்டு நின்றுகொண்டான். எனக்கு பற்றிக்கொண்டு வந்ததே பாருங்கள். பொண்ணுங்க எங்கயாவது இருந்தா போதுமே உரசுரதுக்கே அலையுரிங்க என்று கத்தியவுடன் தான் தள்ளி நின்றான்.


இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன், பேருந்தில் செல்லும் பெண்களெல்லாம் பப்ளிக் ப்ராபர்டியா???? இந்த மாதிரி ஈனப்பிறவிகள் வந்து உரசி விட்டு சாரி என்று சொல்லிவிட்டு செல்வதற்கு??? இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், நான் சத்தம் போட்டும் அருகில் இருந்தவர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. எனக்கு பின்னே அமர்ந்திருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த சமூகம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது??? அவர்கள் வீட்டுப்பிள்ளைஎன்றால் ஒரு வேலை ஆதரவிற்கு வந்திருப்பார்களோ??? அந்தப் பேருந்தின் நடத்துனர் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஏதோ நான் செய்தது தவறு என்ற எண்ணம் எனக்கே உண்டாகுமாறு செய்துவிடுவார்கள் போலிருந்தது. இப்படிப்பட்ட பார்வையாளர்கள் இருப்பதால் தான் பல பெண்கள் வாயைத்திறந்து இந்த கொடுமைகள் பற்றி பேசுவதில்லை.
பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் இந்த வகையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்றைய இளசுகள் பொறுக்கித்தனமாய் நடந்துகொள்வதாகப் பல பெருசுகள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் பல தலை நரைத்த ஆசாமிகள் தான் இப்படிக் கீழ்த்தரமாய் நடந்து கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆண்கள் எப்படி ஒரு பெண்ணுக்கு நல்ல கணவனாகவோ, நல்ல தந்தையாகவோ, இல்லை நல்ல தமையனாகவோ இருக்க முடியும்??? அதுவும் நான் சந்தித்த இந்த ஆளுக்கு என் தந்தையின் வயதிருக்கும். என்னால் இன்னும் கூச்சலிட்டு போலீசில் அந்த ஆளைப் பிடித்துக்கொடுத்திருக்க முடியும். அப்படி செய்தால், அவருக்கு ஒரு பெண் இருப்பின் அவள் எந்த அளவுக்கு கூனிக் குறுகிப் போவாள் என்பதை என்னால் உணர முடிந்தது.

அந்த ஆள் கூறிய சாரி கூட தான் செய்ததது தவறு என்று உணர்ந்து கூறிய வார்த்தையில்லை. இதையே வேலையாய் கொண்டிருக்கும் இவனைப்போல கேடுகெட்டவர்கள் இருக்கும் வரையில் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் சிறிதளவேனும் இல்லாமல் போகப்போவதில்லை. நண்பர் ஒருவர் முன்பு தான் பதிவில் கூறியது போல் " travelling alone is a nightmare for many girls because of these kinds of men".

இவ்வாறு நடந்துகொள்ளும் ஆண்கள் தங்களின் ஒரு நிமிட அல்ப ஆசைக்காக தங்கள் மனைவி மக்கள் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
என்று மாறும் இந்த சமூகம். என்று குறையும் இப்படிப்பட்ட அடக்குமுறைகளும் அசிங்கங்களும்??? யோசிப்பார்களா வெற்றுப்பார்வையாளர்கள்???