Tuesday, November 10, 2015

தீபாவளியும் அம்மாச்சியும்

தீபாவளினாலே முதல்ல ஞாபகத்துக்கு வரது அம்மாச்சிதான். 
இதென்னடா பொங்கல்-னாலும் அம்மாச்சிதான் தீபாவளினாலும் அம்மாச்சிதானா? அப்படின்னு கேட்குறது புரியுது. 
அதென்னமோ தெரியல.. எங்க வாழ்க்கையெல்லாம் அம்மாச்சிய சுத்தியே ஓடிட்டு இருக்கு. அவ்வளவு சுறுசுறுப்பான மனுஷி. 
மீண்டும் தீபாவளி.. இத்தனை வருஷம் ஆனதுக்கப்புறமும், தீபாவளினா அம்மாச்சி வீடுதான். சின்ன வயசுல, முந்தின நாளே மாமாகூட கிளம்பிடுவோம். ஹாஸ்டல்ல இருந்து சின்ன மாமாவும் வந்துடும். அன்னிக்கு ராத்திரி மாமா பிரண்ட்ஸ் எல்லாரும் வந்துடுவாங்க. ராஜ்மோகன் அண்ணா, ரவி அண்ணா, செந்தில் அண்ணா, கோபால் அண்ணா, எல்லாரும் சேர்ந்து சீட்டு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. ராத்திரி எவ்ளோ நேரம் போகும்னு தெரியாது. ஆனா நடுவுல ஒரு பிரேக் இருக்கும். அதுதான் எங்க அப்பா வந்துட்டு போற நேரம். 
அப்பாவுக்கு சீட்டு விளையாடுறது எல்லாம் பிடிக்காது. அப்போ அப்பா செம ஸ்ட்ரிக்ட். வீட்ல எல்லாரும் பயப்படுவோம். அப்பா வந்துட்டு போற வரைக்கும் சீட்டுக்கட்டு இருந்த அடையாளம் கூட இருக்காது. 
மறுநாள் விடியகாலைல அஞ்சு மணிக்கே அம்மாச்சி எழுப்பி விட்டுடுவாங்க. நல்லெண்ணெய்ல என்னென்னமோ போட்டு காய்ச்சி வச்சிருப்பாங்க. அந்த பக்கம், தென்னை மரத்தடில பெரிய காசி அண்டா நெறைய தண்ணி காஞ்சுட்டு இருக்கும். அந்த காசி அண்டா மேல எனக்கு ஒரு தனி பாசம். காலி அண்டாவக்கூட தனியா தூக்குறது கொஞ்சம் கஷ்டம். 
குளிச்சு முடிச்சுட்டு ஒரு ரவுண்டு பட்டாசு வெடிக்கும். எனக்கு பட்டாசு வைக்க பயம்னு, ஒரு பெரிய குச்சில முன்னாடி துணிய சுத்தி அத மண்ணெண்ணெய்ல நனைச்சு பத்த வெச்சு தருவாங்க, நான் கேட்டுக்கு இந்தபக்கதுல இருந்தே பட்டாசு பத்தவைப்பேன். 
அதுக்கப்புறம் நல்லா கோழி அடிச்சு விறகடுப்புல குழம்பு வைப்பாங்க. எனக்கும் என் பெரிய மாமாவுக்கும் தீபாவளி கோழிக்கொழம்பு விறகடுப்புல வெச்சு சாபிட்டாத்தான் தீபாவளி. 
இந்த பதிவு தீபாவளிய பத்தியான்னு சொல்லத்தெரியல ஆனா கண்டிப்பா எங்க அம்மாச்சிய பத்தினது.
அம்மாச்சி தாத்தாகூட இருக்கும்போது, ஏதாவது காரணத்துக்காக அமைதியா இருந்தா, ரெண்டுபேரும் மாத்தி மாத்தி வந்து ஒரு பத்துநிமிஷம் பக்கத்துல அமைதியா உட்காந்திருந்துட்டு போவாங்க. நானா எதாவது சொல்றனானு பார்க்க. 
 எல்லாருக்கும் அவங்கவங்க அம்மா சாப்பாடுதான் அமிர்தம். ஆனா எங்க குடும்பத்துல, எங்க அப்பா உட்பட, எங்க அம்மாச்சி சமையலுக்கு அப்புறம் தான் அம்மா. என் தம்பி சொல்லுவான், என்னமோ பண்ணுவாங்க, என்னத்தையோ அரைச்சு ஊத்துவாங்க, ஆனா டேஸ்டா இருக்கும்னு. சமையல்னு இல்ல, வேலை செய்யுரதுல இருந்து, குழந்தைங்கள பாத்துகுரதுல இருந்து எல்லாத்துலையும் அம்மாச்சி தான். 
அம்மாசியும் தாத்தாவும் அமெரிக்காவில் 

நான் பாடுற அம்மாச்சி புராணத்த கேட்டு கேட்டு அம்மாசிக்கு நெறைய பேர் ரசிகர்கள். என் சத்தீஸ்கர், பெங்காலி, ஸ்பானிய பிரண்ட்ஸ் எல்லாருக்கும், என் அம்மாச்சி "அம்மாச்சிதான்". 
ஆறு வருஷமா வெளிநாட்டுல தான் தீபாவளி. என்னதான் எல்லாம் பழகிப்போய் இருந்தாலும், தீபாவளி அன்னிக்கு மனசு அம்மாச்சிக்காகவும், அந்த காசி அண்டாவுக்காகவும் ரொம்ப ஏங்கும். இந்த வருஷம், என்னோட சேர்ந்தும் அண்டாவும் அம்மாச்சிக்காக ஏங்கும். அம்மாச்சியும் தாத்தாவும், இந்த வருஷம் சின்ன மாமா குடும்பத்தோட அமெரிக்காவுல தீபாவளி கொண்டடுறாங்க. 
இதெல்லாம் எல்லார்த்துக்கும் நடந்திருக்கும், எல்லாரும் அனுபவிச்சு, அனுபவிச்சிகிட்டு இருப்பிங்க. ஒன்னும் புதுசில்லை. ஆனாலும், என் அம்மாச்சிய பத்தி எழுதுறதுல எனக்கு மறுபடியும் அஞ்சாவது படிக்குற யமுனாவா மாறின சந்தோஷம். பல சமயங்கள்ல, நடக்குற எல்லா விஷயத்தையும் எழுதனும்னு தோணும். எல்லாத்தையும் பதிவாக்கனும்னு மனசு ஒரு பக்கம் ரெக்கார்டு பண்ணிகிட்டே இருக்கும். யாருக்காக பதிவு செய்யுறேன், என்ன எழுதுறேன், யார் படிப்பாங்கன்னு எல்லாம் இல்ல. எழுதிட்டா போதும். எல்லா மனுஷங்களுமே எவ்ளோ வயசானாலும் அவங்க அம்மாக்கு குழந்தைதான். ஆனா அந்த குழந்தைத்தனத்த அம்மாச்சி/பாட்டி தாத்தாகூட இருக்கும் போதுதான் உணர முடியும்.